அமெரிக்காவில் நவம்பர் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பாக டொனால்டு ட்ரம்ப்பும், ஜனநாயக் கட்சி சார்பாக ஜோ பைடனும் போட்டியிட்டனர்.
கருத்துக்கணிப்புகளின் முடிவுகளைப் போலவே ஜோ பைடன் முன்னிலை பெற்று வெற்றியை ஈட்டினார்.
ஒருவார இழுபறியாக இருந்தாலும் அதிபருக்கான மெஜாரிட்டியான 270 வாக்குகளை விட அதிகளவில் ஜோ பைடன் பெற்றார்.
ட்ரம்ப் செய்த சில மேல்முறையீடுகள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன.
306 வாக்குகளைப் பெற்று அதிபராக எந்தத் தடையும் இல்லாமல் பயணிக்கிறார் ஜோ பைடன். ஆனால், ட்ரம்ப் இன்னும் பிடிவாதமாக இருக்கிறார்.
பல்வேறு தரப்பினரின் அறிவுரை, நாடாளுமன்ற வன்முறைக்கு பின்னர் ஆட்சி அதிகாரத்தை பைடனிடம் வழங்க ட்ரம்ப் சம்மதித்தார்.
இதனிடையே ட்ரம்பை ஆட்சிக்காலம் முடிவடைவதற்கு முன்னதாகவே பதவிநீக்கம் செய்ய வேண்டுமென ஜனநாயக கட்சியினர் குரல் எழுப்பி வருகின்றனர்.
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பைடன் வரும் 20 ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.
இந்நிலையில் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், “வரும் 20 ஆம் தேதி நடக்கவிருக்கும் 46 ஆவது அதிபராக பைடன் பதவியேற்கும் விழாவில் பங்கேற்க போவதில்லை” என தெரிவித்தார்.
கடந்த 150 ஆண்டு கால வரலாற்றில் புதிய அதிபரின் பதவியேற்பைப் புறக்கணிக்கும் முதல் முன்னாள் அதிபராக ட்ரம்ப் பார்க்கப்படுகிறார்.
டெலவேரின் வில்மிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய பைடன், “நான் அதிபராக பதவியேற்கும் விழாவிற்கு டிரம்ப் வராமல் இருப்பதே நல்லது.
நான் ட்ரம்ப்பை பற்றி நினைத்து வைத்திருந்த மோசமான நிலையைக் கூட அவர் மீறிவிட்டார். அவர் நாட்டிற்கே ஒரு சங்கடம், உலகத்திற்கு முன் அமெரிக்காவுக்கும் பெரும் அவமானத்தை ஏற்படுத்திவிட்டார்.
அவர் அதிபர் பதவியை வகிக்க தகுதி இல்லாதவர். ட்ரம்ப் அமெரிக்கா வரலாற்றில் மிகவும் திறமையற்ற அதிபர்களில் ஒருவர்.
தனது பதவியேற்பு விழாவிற்கு துணை அதிபர் மைக் பென்ஸ்க்கு அழைப்பு விடுக்கப்படும்” எனக் கூறினார்.
இதையும் படிக்கலாமே: தடுப்பூசி போட்ட செவிலியர் திடீரென மயங்கிவிழுந்தார்!
அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…