அண்மைக்காலமாக அமெரிக்காவில் இனவெறி கொலைத் தாக்குதல்கள் தொடர்ந்து அரங்கேறி கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளில் 43 ஆயிரம் பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
மார்ச் மாதம் 16ஆம் தேதி அட்லாண்டாவில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் ஆசிய வம்சாவளியினர் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவம் நடந்த அடுத்த ஒருவாரத்தில் கொலொராவிலுள்ள பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிச்சூடு நடந்தது.
இதேபோல் கடந்த மாத தொடக்கத்தில் விர்ஜினியா கடற்கரையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் படுகாயமடைந்தனர்.
கடந்த மாத இறுதியில் ஆரஞ்ச் நகரத்தில் உள்ள அலுவலக கட்டிடத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தொடர்ந்து கரோலினாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து இண்டியானாபொலிஸ் நகரில் உள்ள பெட்எக்ஸ் நிறுவனத்திற்குள் புகுந்து மர்ம நபர் நடத்திய தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர்.
அண்மையில் லூசியானா, விஸ்கான்சிலில் துப்பாக்கிச்சூடு அரங்கேறியது.
இந்நிலையில் தற்போது அமெரிக்காவின் மின்னிபோலிஸ் நகரில் இரவுவிடுதி அருகே சனிக்கிழமையன்று மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் உயிரிழந்தனர்.
மொனார்க் இரவு விடுதி அருகே நள்ளிரவு 2 மணியளவில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் 8 பேர் காயமடைந்தனர். இதையடுத்து முதுலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு, ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அவர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.
படுகாயமடைந்தவர்களில் 3 பேர் கவலைக்கிடமாக உள்ள நிலையில், துப்பாக்கி சூடு நடத்தியவர்களில் ஒருவர் கொல்லப்பட்டு, மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு கறுப்பினத்தவர் ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்ட அந்த இடத்திலேயே இந்த துப்பாக்கிச்சூடும் அரங்கேறியுள்ளது.
இரவுநேர கேளிக்கைக்கு விடுதிக்கு வெளியே வாக்குவாதத்தில் ஈடுபட்ட இருவர், திடீரென தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் தாக்குதல் நடத்தினர்.