அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்ட சில நொடிகளில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த மூன்று அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
வடகிழக்கு ஜார்ஜியாவில் உள்ள கெய்ன்ஸ்வில்லே விமான நிலையத்திலிருந்து cessna 182 என்ற ஒற்றை என்ஜின் விமானம் ஒன்று புளோரிடாவுக்கு புறப்பட்டது.
இந்த விமானத்தில் மூன்று பேர் பயணித்தனர். விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சுமார் 3.2 கிலோ மீட்டர் தொலைவில் விமான நிலையத்துடனான கட்டுப்பாட்டை இழந்த விமானம் விபத்தில் சிக்கியது.
இதனை மத்திய விமான போக்குவரத்து அமைச்சகமும் உறுதி செய்துள்ளது.
தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற தீயணைப்பு படையினர் விமானத்தில் பயணித்த 3 பேரின் உடலை கண்டுபிடித்தார்.
இருப்பினும் உயிரிழந்தவர்களின் விபரம் குறித்து தற்போதுவரை வெளியாகவில்லை. விபத்துக்குள்ளான விமானத்தின் இறக்கை ஒரு வீட்டின் மீது விழுந்தது.
இதில் அந்த வீடு சேதமடைந்ததாகவும், ஆனால் வீட்டில் இருந்த யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும் விமானத்திலிருந்து எரிப்பொருள் வீட்டின் மீது கொட்டியது. இதனால் வீட்டிலிருந்த குடும்பத்தினர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்
இந்த விமான விபத்து குறித்து மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் இணைந்து விசாரணை நடத்திவருகிறது.
அமெரிக்காவில் சிறிய ரக விமானங்கள் விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகிவருகிறது. இதனால் அவ்வப்போது உயிர்கள் பலியாகிகொண்டுதான் இருக்கின்றன.
சிறிய ரக விமான விபத்துக்கள் குறித்து விசாரணை நடைபெற்றுவந்தாலும் விபத்துக்கள் நடப்பது சற்றும் குறைந்தபாடில்லை என்பது அதிருப்தி தரக்கூடிய விஷயம்.