அமெரிக்காவில் இருவேறு இடங்களில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் மொத்தம் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் காயமடைந்தனர்.
அமெரிக்காவில் விளையாட்டு அரங்கில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள ராக்போர்டு என்ற பவுலிங் விளையாட்டு அரங்கிற்குள் மர்ம நபர் ஒருவர் திடீரென புகுந்தார்.
அவர் அங்குள்ளவர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.
தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துப்பாக்கிச்சூடு நடந்த அந்த அரங்கத்திற்கு யாரும் செல்ல வேண்டாம் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
இதேபோல் மாசசூசெட் பகுதியில் நடந்த இசை காணொளி படப்பிடிப்பின்போது மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஐந்துபேர் படுகாயமடைந்தனர்.
அவர்களில் இரண்டு பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
அமெரிக்காவில் இதுபோன்று துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது.
அதுவும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்ட்டாட்டத்தையொட்டி பயங்கரவாத சம்பவங்கள் தலைத்தூக்க ஆரம்பித்துள்ளது.
ஏற்கனவே கொரோனா பிடியில் சிக்கி தவிக்கும் மக்கள், இதுபோன்று திடீரென அரங்கேறும் பயங்கரவாத சம்பவங்களால் அச்சமடைந்துள்ளனர்.
இதையும் படிக்கலாமே: கொரோனாவால் வேலை இழந்தோருக்கான நிதி ரத்து!
அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…