ராகுல் காந்தி மிகவும் பதற்றமானவர் என அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தனது அரசியல் பயணத்தை நினைவுபடுத்தும் விதமாக, தி பிராமிஸ்டு லாண்ட் (The Promised Land) என்ற பெயரில் புத்தகம் ஒன்றை வெளியிடவுள்ளார்.
அதில் தான் சந்தித்த இந்திய அரசியல் தலைவர்கள் குறித்தும், அவர்களுடனான நட்பு குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2009 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்தபோது மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்தது.
அப்போது காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக ராகுல்காந்தி இருந்தார்.
மேலும் தனது இந்திய பயணத்தின்போது ராகுலை ஒபாமா சந்தித்து பேசினார்.
இந்த சூழலில் காங்கிரஸ் தலைவர்கள் குறித்து ஒபாமா தனது புத்தகத்தில் விரிவாக எழுதியுள்ளார்.
இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குறித்து புத்தகத்தில் கருத்து பதிவிட்டுள்ள ஒபாமா, அவர் எந்த ஒரு விஷயத்திலும் கவனத்தை கவர விரும்பினாலும், அதுகுறித்த ஆழமான நுண்ணறிவோ, வேட்கையோ இல்லாதவர் என்றும், பதற்றமானவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியரை கவர ஒரு மாணவர்கள் என்னவெல்லாம் செய்வார்களோ அவற்றையெல்லாம் செய்து மற்றவர்களை ஈர்க்கக்கூடிய குணம் கொண்டவர் ராகுல்காந்தி என்றும் ஒபாமா தெரிவித்துள்ளார்.
சோனியா காந்தி மிகவும் அழகானவர் என்பதையும் ஒபாமா மறைமுகமாக புத்தகத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதே காலகட்டத்தில் ஆட்சியில் இருந்த பிரதமர் மன்மோகன் சிங், அன்பான, எளிதில் உணர்ச்சிவயப்படாத தலைவர் என்றும் ஒபாமா குறிப்பிட்டார்.
இதேபோல் ரஷ்ய அதிபர் புதின், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குறித்தும் தனது புத்தகத்தில் ஒபாமா எழுதியுள்ளார்.
இதையும் படிக்கலாமே: கமலா ஹாரிசை தமிழகத்துக்கு அழைக்கும் மக்கள்!
அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…