அமெரிக்காவின் சிகாகோ நகரிலுள்ள பிரபல ஓட்டலில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
புளூமிங்டேல் என்ற நகரில் உள்ள இந்தியன் லேக்ஸ் என்ற பெயரில் 5 மாடி ஓட்டல் ஒன்று செயல்பட்டுவருகிறது. அங்கு அதிகாலை நேரத்தில் துப்பாக்கிச்சூடு நடந்ததாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடந்ததை உறுதி செய்து, குண்டு பாய்ந்தவர்களை உடனடியாக அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
துப்பாக்கிச்சூட்டில் ஜேம்ஸ் மெக்கில் ஜூனியர் (வயது 27) என்பவர் உயிரிழந்தார். இதில் படுகாயமடைந்த 4 பேர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தின்போது அந்த ஓட்டலில் 2 வெவ்வேறு தரப்பினரின் சந்திப்பும், விருந்தும் நடைபெற்றதாக தெரிகிறது.
அப்போது மோதல் ஏற்பட்டு துப்பாக்கிச்சூடு நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்பவத்தின்போது கிட்டத்தட்ட 200 பேர் இருந்ததாக தெரிகிறது.
துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து இந்தியன் லேக்ஸ் ஓட்டல் மூடப்பட்டது.
சம்பவம் நடந்த பகுதிக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என புளூமிங்டேல் காவல்துறையினர் பேஸ்புக் வாயிலாக அறிவுறுத்தியுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.