அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்ட எட்டு நாட்களில் செவிலியர் ஒருவருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கலிபோர்னியாவை சேர்ந்த செவிலியர் மாத்யூ கடந்த 18 ஆம் தேதி ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
இந்நிலையில் அவருக்கு கடந்த 24 ஆம் தேதி மாலை குளிர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து 26 ஆம் தேதி மருத்துவமனைக்கு சென்ற மாத்யூ கொரோனா பரிசோதனை செய்தார்.
அப்போது அவருக்கு தொற்று இருப்பது தெரியவந்தது. தடுப்பூசி போடுவதற்கு முன்பே மாத்யூவுக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் வைரஸ்க்கு எதிரான ஆண்டிபாடிகள் உடலில் உருவாக 10 முதல் 14 நாட்கள் வரை ஆகும் என்றும், அதுவரை பாதுகாப்பாக உடல்நிலையை பேணுவது அவசியம் என்றும் கனேடிய மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அதாவது கொரோனா தடுப்பூசி தான் எடுத்துக்கொண்டு விட்டோமோ எனக்கூறி சுதந்திரமாக நடமாடக்கூடாது என்றும், மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் கைக்கழுவுதல், மாஸ் அணிதல், தனிநபர் இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்டவற்றை கடைபிடிக்க வேண்டும்.
இதுவே கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
முன்னதாக அமெரிக்காவில் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சுகாதார பணியாளர்களுக்கு முகம் மற்றும் உடலில் எரிச்சல், கண்களில் வீக்கம், தலைச்சுற்றல், மூச்சுவிடுதலில் சிரமம் உள்ளிட்ட அலர்ஜி ஏற்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது குறிப்பிடதக்கது.
இதையும் படிக்கலாமே: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் கமலா ஹாரிஸ்!
அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…