கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கலிபோர்னியா மற்றும் ஓஹியோவில் இன்று முதல் இரவு நேர பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை.
இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.
குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 58 ஆயிரத்து 354 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரு கோடியே 20 லட்சத்து 72 ஆயிரத்து 560க்கும் அதிகமானோருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கனக்டிகட், மிசிகன், நியூ ஜெர்சி, ஒஹியோ உள்ளிட்ட 7 மாகாணங்களில் உயிரிழப்புகள் 2 மடங்காகியுள்ளன. மேலும் புளோரிடா, டெக்சாஸ், கலிபோர்னியாவில் இதை விட அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் கலிபோர்னியாவிலும் கடந்த சில நாட்களாக கொரோனாவின் வேகம் அதிகரித்துவருகிறது. அங்கு புதிதாக உருவாகும் நோயாளிகளால் மருத்துவமனைகளில் படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
எனவே கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கலிபோர்னியா மற்றும் ஓஹியோவில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியேறக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு டிசம்பர் 21 ஆம் தேதிவரை அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரவல் கட்டுக்குள் வராமல் இருந்தால் இரவு நேர பொதுமுடக்கம் நீட்டிக்கப்படலாம் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இரவு நேரத்தில் அத்தியாவசிய கடைகள் மற்றும் மருந்து கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், உணவகங்களிலிருந்து உணவுகளை பார்சல் வாங்கி செல்ல அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே: கொரோனாவால் நிமிடத்துக்கு ஒரு அமெரிக்கர் உயிரிழப்பு
அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…