கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த 2 மாதங்களாகவே பல்வேறு பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதில் 30 பேர் வரை உயிரிழந்துள்ளனர், 100க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். காட்டுத்தீயால் 25 லட்சம் ஹெக்டெருக்கு அதிகமான நிலப்பரப்புகள் தீயில் எரிந்து நாசமாகின. ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டடங்கள் தீக்கிரையாகின. 5000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. தீயை கட்டுப்படுத்த முடியாத கலிபோர்னியா மாகாண அரசு ஆஸ்திரேலியா மற்றும் கனடா நாடுகளின் உதவியை நாடியுள்ளது. இதுவரை இல்லாத அளவு காட்டுத்தீ வேகமாக பரவி வருவதாக கலிபோர்னியா மாகாண அரசு கூறியுள்ளது.
இந்நிலையில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள நாபா பள்ளத்தாக்கில் இன்று திடீரென காட்டுத்தீ பயங்கரமான வேகத்தில் பரவியது. சான் பிரான்சிஸ்கோவிலிருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திராட்சை தோட்டங்கள் நிறைந்த நாபா பள்ளத்தாக்கில் ஏற்பட்ட தீவிபத்தால் அங்கிருந்த நூறு ஏக்கர் பரப்பளவிலான திராட்சை தோட்டங்கள் கொளுந்துவிட்டு எரிந்தன. இதனையடுத்து அப்பகுதியிலிருக்கும் வீடுகள் மற்றும் மருத்துவமனைகளில் தங்கியிருந்த ஏராளமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டன. ஆனால் காட்டுத்தீயால் பெரிய பெரிய கட்டடங்கள் கடுமையாக சேதமடைந்தன. பயங்கர காட்டுத்தீயால் செயிண்ட் ஹெலினா பகுதியில் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
குறைவான ஈரப்பதம், காய்ந்த சருகுகள் அதிகமாக இருப்பதால் வேகமாக தீ பரவி வருவதாகவும், காற்றின் வேகத்தால் தீயை கட்டுக்குள் கொண்டுவருவது சவாலாக இருப்பதாக தீயணைப்புப்படையினர் தெரிவித்தனர். காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படை வீரர்களுடன் அந்நாட்டு சிறை கைதிகளும் ஈடுபட்டுள்ளன. கலிபோர்னியா கடந்த சில ஆண்டுகளாகவே காட்டுத் தீயினால் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்து வருகிறது.
இதையும் படிக்கலாமே: அமெரிக்காவில் வில்வித்தையில் அசத்தும் தமிழக வம்சாவளி சிறுவன்
அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…