அமெரிக்காவில் கொரோனாவால் 5 லட்சம் பேர் உயிரிழப்பு!

coronavirus

அமெரிக்காவில் இதுவரை 5 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை.

இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.

குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாகவே நாட்டின் தினசரி பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

coronavirus

உலக அளவில் 11 கோடியே 19 லட்சத்து 54 ஆயிரத்து 201 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 24 லட்சத்து, 77 ஆயிரத்து 819 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 204 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,11,338 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், நேற்று ஒரேநாளில் 5 ஆயிரத்து 530 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அங்கு இதுவரை இரண்டு கோடியே 87 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த பைசர் மற்றும் மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசி செலுத்தும் பணி அமெரிக்காவில் தீவிரமாக ஒருபுறம் நடைபெற்றுவந்தாலும் கொரோனா தொற்று பரவலின் வேகம் கட்டுக்குள் வராமல் இருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே ஜூலை மாதத்துக்குள் அமெரிக்காவில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என அதிபர் பைடன் தெரிவித்துள்ளார்.