அமெரிக்காவில் இதுவரை 5 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது

covid-vaccine

அமெரிக்காவில் இதுவரை 5 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.

குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாகவே நாட்டின் தினசரி பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

இதனிடையே கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி முதல் அமெரிக்காவில் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பைடன், மைக் பென்ஸ் உள்ளிட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

Vaccine

இதன்மூலம் மக்களுக்கு தடுப்பூசி மீதான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. முன்களப்பணியாளர்கள் மட்டுமின்றி அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளனர்.

தொடர்ந்து மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புத்துறை அனுமதி அளித்தது. இதனையடுத்து ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் ஒரு டோஸ் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்தவும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

தான் பதவியேற்ற 100 நாட்களுக்குள் 10 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று அதிபா் ஜோ பைடன் உறுதி அளித்திருந்தார்.

அதன்படி தற்போது 5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அதிபர் பைடன், “கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் கைவிட்டுவிடக் கூடாது.

கைகளைக் கழுவுதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல், முகக் கவசம் அணிதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடா்ந்து கடைபிடிக்க வேண்டும்.

நாட்டில் அனைத்து தடுப்பூசி செலுத்தும் மையங்களிலும் தொடர்ச்சியாக தடுப்பூசிகள் விநியோகிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது” என தெரிவித்தார்.