என்ன கொடுமை சார் இது? பாதுகாப்பான நாடுகள் பயணப்பட்டியலில் இருந்து அமெரிக்கா நீக்கம்!

கொரோனா வைரஸ் பரவல் மற்றும் பாதிப்பு காரணமாக பாதுகாப்பான நாடுகள் பயணப்பட்டியலிருந்து அமெரிக்காவை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியுள்ளது.

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

கொரோனா வைரஸ் பரவலிருந்து மிகப்பெரிய போராட்டத்துக்கு பின் மீண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம் இன்று முதல் எல்லைகளை திறந்துள்ளது. சுமார் 4 மாதங்களுக்கு பின் 14 நாடுகளில் இருந்து சுற்றுலா மற்றும் வணிக பயணங்கள் மேற்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது. அல்ஜீரியா, ஆஸ்திரேலியா, கனடா, ஜார்ஜியா, ஜப்பான், மாண்டினீக்ரோ, மொராக்கோ, நியூசிலாந்து, ருவாண்டா, செர்பியா, தென் கொரியா, தாய்லாந்து, துனிசியா மற்றும் உருகுவே ஆகிய நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்தது. கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சுற்றுலா வருவாய் மூலம் மீட்டெடுத்துவிடலாம் என்பது ஐரோப்பிய நாடுகளின் மாஸ்டர் பிளான். அமெரிக்கா, ரஷ்யா, பிரேசில் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த நாடுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட நாடுகள் பயண அனுமதி ஒப்புதல் கிடைக்க குறைந்தது இரண்டு வாரங்கள் ஆகலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.