அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்த வன்முறைகளை அடுத்து அதிபராக பதவியேற்க உள்ள ஜோ பைடனுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் பைடன் வெற்றி பெற்றதை ஏற்க மறுத்த ட்ரம்ப் ஆதரவாளர்கள், போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த 6ஆம் தேதி நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த அவரது ஆதரவாளர்கள் அத்துமீறி வன்முறையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே வரும் 20 ஆம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக பைடன் பதவியேற்கவுள்ளார்.
தொடர்ந்து அமெரிக்காவில் பதற்றமான சூழல் நிலவிவருவதால் பைடன் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அவருடன் ஆயுதம் தாங்கிய ராணுவ வீரர்களும் பாதுகாப்பு அதிகாரிகளும் புடைசூழ செல்கின்றனர்.
அமெரிக்காவில் உள்ள சில தீவிரவாத குழுக்கள் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற வன்முறை நிகழ்வில் உயிரிழந்த 2 காவல் துறையினருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாடெங்கும் அமெரிக்க கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிட அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து வெள்ளை மாளிகையில் அமெரிக்க தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறந்தது. அங்கு பணிபுரியும் அதிகாரிகள் தங்கள் சக வீரருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இதற்கிடையே வன்முறை நிகழ்வுகளை தூண்டிவிட்டதற்காக ட்ரம்ப் பதவி விலக வேண்டும் என அவருக்கு நெருக்கடிகள் மேலும் அதிகரித்துள்ளன.
ட்ரம்ப்பை பதவியில் இருந்து நீக்க வைக்கும் 25ஆவது சட்டத்திருத்தத்தை அமல்படுத்த ஆதரவு அளிப்பதாக பல்வேறு நாடுகளுக்கான அமெரிக்க தூதர்களும் தெரிவித்துள்ளனர்.
ட்ரம்ப்பை நீக்குவதன் மூலம் மட்டுமே அமெரிக்காவின் கவுரவத்தை வெளிநாடுகளில் காப்பாற்ற முடியும் என அவர்கள் கூறியுள்ளனர். ட்ரம்ப் பதவி விலக வேண்டும் என அவரது குடியரசு கட்சி எம்.பி. பேட் டூமியும் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிக்கலாமே: ட்ரம்புக்கு ஆதரவாக இந்தியர்களும் இருக்கின்றன! அமெரிக்க கலவரத்தில் இந்திய தேசிய கொடி
அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…