அண்மைக்காலமாக அமெரிக்காவில் இனவெறி கொலைத் தாக்குதல்கள் தொடர்ந்து அரங்கேறி கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளில் 43 ஆயிரம் பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
இந்த ஆண்டில் மட்டுமே அமெரிக்காவில் 230 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்துள்ளன.
மார்ச் மாதம் 16ஆம் தேதி அட்லாண்டாவில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் ஆசிய வம்சாவளியினர் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவம் நடந்த அடுத்த ஒருவாரத்தில் கொலொராவிலுள்ள பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிச்சூடு நடந்தது.
இதேபோல் கடந்த மாத தொடக்கத்தில் விர்ஜினியா கடற்கரையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் படுகாயமடைந்தனர்.
கடந்த மாத இறுதியில் ஆரஞ்ச் நகரத்தில் உள்ள அலுவலக கட்டிடத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தொடர்ந்து கரோலினாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதுபோன்று கடந்த 2 மாதங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறிக்கொண்டே இருந்தன.
இந்நிலையில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக சுட்டதில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
உணவகம் ஒன்றில் நடந்த இசை கச்சேரியின் போது காரில் வந்திறங்கிய மூன்று நபர்கள் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டனர்.
இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் காயமடைந்த 25 பேர் வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு எடுத்து செல்லப்பட்டனர். அங்கு பதிவான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.