இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு உச்சத்தில் உள்ளது.
நாட்டையே அச்சுறுத்திவரும் கொரோனாவால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பல இடங்களில் நோயாளிகளுக்கு சிகிச்சை முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறை, மருந்து பற்றாக்குறை மற்றும் படுக்கை பற்றாக்குறையால் செய்வதறியாது திணறுகிறது இந்தியா.
ஒரு பக்கம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவந்தாலும், மறுபுறம் தொற்று பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இதனிடையே ஒரே நாளில் 3.52 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2,800 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கூகுள் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியும், அமெரிக்க இந்தியருமான சுந்தர் பிச்சை, “கூகுள் நிறுவனம் இந்தியாவுக்கு மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக 135 கோடி ரூபாயை GiveIndia மற்றும் UNICEF ஆகிய அமைப்புகளுக்கு வழங்குவோம்.
இந்தியாவின் மோசமான கொரோனா பாதிப்பை கண்டு அதிர்ச்சி அடைகிறேன்” என தெரிவித்தார்.
இதேபோல் மற்றொரு அமெரிக்க இந்தியரும், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான சத்யா நாதெல்லா, “இந்தியாவின் கொரோனா நிலையை கண்டு இதயம் நொறுங்குகிறது.
பொருளாலும் தொழிநுட்பத்தாலும் தனது நிறுவனம் தொடர்ந்து இந்தியாவுக்கு உதவுவோம். ஆக்சிஜனை உருவாக்கும் கருவிகளை வாங்க இந்தியாவுக்கு உதவ உள்ளோம்” என தெரிவித்தார்.