தொடர்ந்து துப்பாக்கி சட்டங்கள் கடுமையாக்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துவரும் சூழலில், அண்மைக்காலமாக அமெரிக்காவில் இனவெறி கொலைத் தாக்குதல்கள் தொடர்ந்து அரங்கேறி கொண்டிருக்கிறது.
மார்ச் மாதம் 16ஆம் தேதி அட்லாண்டாவில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் ஆசிய வம்சாவளியினர் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவம் நடந்த அடுத்த ஒருவாரத்தில் கொலொராவிலுள்ள பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிச்சூடு நடந்தது.
இதேபோல் கடந்த வாரம் விர்ஜினியா கடற்கரையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் படுகாயமடைந்தனர்.
கடந்த ஒன்றாம் தேதி ஆரஞ்ச் நகரத்தில் உள்ள அலுவலக கட்டிடத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதேபோன்று, நேற்று விருந்து நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் மிசெளரியில் சாப்ட்வேர் பொறியாளராக பணியாற்றும் இந்தியாவின் மத்திய பிரதேசம் போபாலை சேர்ந்த 32 வயதான ஷெரீப் ரஹ்மான் கான், செயிண்ட் லூயிஸில் உள்ள யுனிவர்சிட்டி சிட்டி குடியிருப்பில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அருகிலிருந்தவர்களால் மீட்கப்பட்ட அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக உள்ளூர் நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த கொலைக்கு இனவெறி காரணமா என போலீசார் விசாரித்துவருகின்றனர். உயிரிழந்த ஷெரீப் பெண் தோழியுடன் உறவில் இருந்ததாக கூறப்படுகிறது.