கடந்த 1- ஆம் தேதி டிரம்புக்கும் அவரது மனைவி மெலனியாவுக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் வெள்ளை மாளிகையில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
ஆனால் ட்ரம்புக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டதால் மேரிலாண்ட்டில் உள்ள வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ரெம்டெசிவர் உள்ளிட்ட மருந்துகள் தரப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த 4 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு வெள்ளை மாளிகை திரும்பினார் அதிபர் ட்ரம்ப். அவர் நலமுடன் இருப்பதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
மேலும் அடுத்த சில தினங்களுக்கு அதிபர் ட்ரம்ப், ஓய்வில் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்பட்ட மருந்து, சிங்கப்பூரில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் ரத்தத்திலிருந்து உருவாக்கப்பட்டதாக தேசியத் தொற்றுநோய்த் தடுப்பு நிலையம் தெரிவித்துள்ளது.
நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட ட்ரம்ப், தாம் 3 நாள்களில் மருத்துவமனையிலிருந்து வெளியானதற்குக் காரணம், அமெரிக்க நிறுவனமான Regeneron உருவாக்கிய மருந்து என்று கூறியிருந்தார்.
சிங்கப்பூரில் கொரோனா தொற்றிலிருந்து குணமானவர்களின் ரத்த மாதிரிகளை வழங்குமாறு Regeneron நிறுவனம் சிங்கப்பூரிடம் கேட்டுக்கொண்டுள்ளது. அதன்படி, 3 சிங்கப்பூர் நோயாளிகளின் மாதிரிகளை கொண்டு Regeneron நிறுவனம், REGN-COV2 என்ற மருந்தை உருவாக்கியுள்ளது. அந்த மருந்தையே ட்ரம்புக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
நோயாளிகளின் அனுமதி பெற்ற பின்னரே, சிங்கப்பூரிலிருந்து மாதிரிகள் அனுப்பப்பட்டதாகவும், நெறிமுறைகளுக்கு உட்பட்டே செயல்பட்டதாகவும் Regeneron நிறுவனம் தெரிவித்துள்ளது. ட்ரம்ப் 4 நாட்களில் குணமடைந்து வந்ததற்கு முக்கிய காரணமாக இந்த மருந்து பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்கலாமே: எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது கடவுள் கொடுத்த வரம்: அதிபர் ட்ரம்ப்
அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…