அமெரிக்காவில் ஏப்.19 முதல் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி!

Biden

அமெரிக்காவில் ஏப்ரல் 19 தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.

குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாகவே நாட்டின் தினசரி பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

vaccine

இதனிடையே கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி முதல் அமெரிக்காவில் பைசர், நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 17 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 10 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை எடுத்துக்கொண்டனர். 6 கோடிக்கும் அதிகமானோர் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் எடுத்துக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

அதன்படி வரும் 19 ஆம் தேதி முதல் அங்கு 18 வயது நிரம்பிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என்று அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

தான் பதவியேற்ற முதல் 100 நாட்களுக்குள் 10 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று பைடன் அறிவித்திருந்தார்.

ஆனால் இந்த இலக்கை 58 நாட்களிலேயே நிறைவு செய்த அவர், தற்போது 20 கோடி பேர் என்ற இலக்கை நோக்கி பயணித்துக்கொண்டிருப்பதாகவும், திட்டமிட்டபடி மே முதல் தேதிக்கு, இரு வாரங்கள் முன்பே அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.