“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.
குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவில் கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி முதல் அமெரிக்காவில் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி போடப்பட்டது,
அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பைடன், மைக் பென்ஸ் உள்ளிட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
இதன்மூலம் மக்களுக்கு தடுப்பூசி மீதான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. முன்களப்பணியாளர்கள் மட்டுமின்றி அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டனர்.
தொடர்ந்து மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புத்துறை அனுமதி அளித்தது.
இதனையடுத்து ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் ஒரு டோஸ் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்தவும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
தற்போதைய நிலவரபடி, அமெரிக்காவில் 70 சதவீத மக்கள் ஒரு டோஸ் தடுப்பூசியையாவது போட்டுக்கொண்டுள்ளனர். ஜூலைக்குள் அமெரிக்கர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை பைடன் இலக்காக நிர்ணயித்துள்ளார்.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதனால் மகிழ்ச்சியுடன் முகக்கவசத்தை கழட்டிய பைடன், இன்றைய நாள் அமெரிக்காவுக்கு சிறப்பான நாள் என கூறினார். அழிவிலிருந்து அமெரிக்க மீண்டுவிட்டதாகவும், கொரோனாவிற்கு முந்தைய வாழ்க்கையை அமெரிக்கர்கள் வாழ தொடங்கிவிட்டதாகவும் பைடன் தெரிவித்தார். இதை விட தனக்கு வேறு மகிழ்ச்சி இல்லை என்றும் பைடன் தெரிவித்தார்.