அமெரிக்க அதிபர் பதவிக்கு வருகிற நவம்பர் மாதம் 3 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிடுகிறார்.
கொரோனா பரவலுக்கு மத்தியிலும் பல மாகாணங்களில் அதிபர் ட்ரம்ப், தீவிர தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகிறார்.
கொரோனா உள்பட பல்வேறு பிரச்னைகளில் டொனால்டு ட்ரம்ப்புக்கு எதிராக மக்களின் மனநிலை மாறியிருப்பதால், தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடெனுக்கு வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக கருத்துக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது.
2016 தேர்தலிலும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தனக்கு எதிராக இருந்ததாகவும், ஆனால் தேர்தல் முடிவுகள் அதனை பொய்யாக்கியதாகக் கூறும் ட்ரம்ப் தரப்பு, தற்போதும் அப்படியே நடக்கும் என நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு ஆதரவாக அவரது மகன் ஜூனியர் ட்ரம்ப் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார். அதேபோல் ஜோ பிடனுக்காக ஒபாமா வாக்கு சேகரிக்கவிருக்கிறார்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பின் வெற்றி பெற்றால் சீனாவுடனான அவரது அணுகுமுறைகள் மென்மையாகும்.
இதனால் இந்தியாவுக்கு பேராபத்து ஏற்படும் என அதிபர் ட்ரம்பின் மகனான ட்ரம்ப் ஜூனியர் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்கில் உள்ள லாங் தீவில் இந்திய அமெரிக்க சங்க உறுப்பினர்களிடம், தனது தந்தைக்காக ட்ரம்ப் ஜூனியர் வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர், “சீனா எவ்வளவு ஆபத்தானது என்பது இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமே தெரியும். ஜோ பிடன் இந்தியாவுக்கு எதிரானவர்.
அவர் சீனாவுடன் நட்புடன் இருக்கக் கூடியவர். நாம் சீனாவின் அச்சுறுத்தல்களைப் புரிந்துகொள்ள வேண்டும். இதனை அமெரிக்க இந்தியர்களைவிட வேற யாராலும் புரிந்துகொள்ள முடியாது” எனக் குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிக்கலாமே: இந்திய அமெரிக்க சிறுமிக்கு இளம் விஞ்ஞானி பட்டம்
அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…