அமெரிக்க அதிபர் பதவிக்கு வருகிற நவம்பர் மாதம் 3 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிடுகிறார்.
கொரோனா பரவலுக்கு மத்தியிலும் பல மாகாணங்களில் அதிபர் ட்ரம்ப், தீவிர தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகிறார்.
கொரோனா உள்பட பல்வேறு பிரச்னைகளில் டொனால்டு ட்ரம்ப்புக்கு எதிராக மக்களின் மனநிலை மாறியிருப்பதால், தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடெனுக்கு வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக கருத்துக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது.
2016 தேர்தலிலும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தனக்கு எதிராக இருந்ததாகவும், ஆனால் தேர்தல் முடிவுகள் அதனை பொய்யாக்கியதாகக் கூறும் ட்ரம்ப் தரப்பு, தற்போதும் அப்படியே நடக்கும் என நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு ஆதரவாக அவரது மகன் ஜூனியர் ட்ரம்ப் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார். அதேபோல் ஜோ பிடனுக்காக ஒபாமா வாக்கு சேகரிக்கவிருக்கிறார்.
இந்நிலையில் அண்மையில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் ஜோ பிடன், “நான் தேர்தலில் வெற்றி பெற்று, அமெரிக்க அதிபரானால் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை இலவசமாக அளிப்பேன்” என வாக்குறுதி அளித்துள்ளார்.
முன்னதாக இந்தியாவில் பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக, தேர்தல் வாக்குறுதியாக ‘இலவச கொரோனா தடுப்பூசி’ போடப்படும் என்று கூறியதற்கு கடும் விமர்சனம் எழுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பாஜகவின் வாக்குறுதியை காப்பியடித்த ஜோ பிடனின் வாக்குறுதி உலகளவில் விவாதப் பொருளாக மாறும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே: துர்காவாக மாறி ட்ரம்பை வதம் செய்யும் கமலா ஹாரிஸ்!
அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…