அமெரிக்காவின் அதிபர் தேர்தல் இன்று பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றுநோயின் பரவல் காரணமாக கிட்டத்தட்ட 10 கோடி அமெரிக்கர்கள் ஏற்கனவே தபால் வழியில் தங்களது வாக்குகளை செலுத்திவிட்டனர். இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணியளவில், இந்தியானா, கெண்டகி, மைன், நியூ ஜெர்சி, நியூ யார்க் மற்றும் வர்ஜீனியாவில் முதற்கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கியது.
அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் நிலையில், அவரை எதிர்த்து ஜனநாயக கட்சியின் ஜோ பிடன் களம் காணுகிறார்.
துணை அதிபர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸும், குடியரசு கட்சி சார்பில் மைக் பென்ஸும் போட்டியிடுகின்றனர்.
அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாக்குகள் குறித்த சர்வே ஒன்றில் ஜோ பிடனே முன்னிலையில் இருந்தார்.
அது மட்டுமல்ல, பல கருத்துகணிப்புகளின் முடிவுகளும் ஜோ பிடனுக்கு ஆதரவாகவே வந்திருக்கின்றன.
இந்நிலையில் அமெரிக்கா- கனடா எல்லையில் அமைந்துள்ள நியூ ஹாம்ப்ஷயர் எனும் நகரத்தில் நள்ளிரவு முதலே வாக்குகள் செலுத்தப்பட்டன.
தொடர்ந்து உடனுக்குடன் வாக்குகள் எண்ணப்பட்டன. அங்கு மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையே ஐந்து மட்டும்தான். அந்த ஐந்து வாக்குகளும் ஜோ பிடனுக்கே விழுந்தன. இதனால் அந்தச் சிறிய நகரத்தில் பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அதற்கு அருகில் உள்ள மில்ஸ்ஃபீல்டில், என்ற நகரில் ட்ரம்ப் 16 வாக்குகளும் பிடன் 5 வாக்குகளும் பெற்றார்.
இந்த வெற்றி அப்படியே நீடிக்குமா… இல்லை மற்ற மாகாணங்களில் ட்ரம்ப் முன்னிலை பெறுவாரா என்பது விரைவில் தெரிந்துவிடும்.
இதையும் படிக்கலாமே: எந்த கட்சி வசம் எந்தெந்த மாநிலங்கள்?
அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…