அமெரிக்காவில் பணிபுரிந்து வந்த கேரளாவைச் சேர்ந்த செவிலியை அவரது கணவரே கத்தியால் குத்திக்கொன்ற கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள மோனிபள்ளியைச் சேர்ந்த மெரின் ஜாய் என்ற 28 வயது நிரம்பிய செவிலி, அமெரிக்காவின் புளோரிடா பகுதியில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். Broward Health Coral Springs Hospital என்ற மருத்துவமனையிலிருந்து கடந்த திங்கள் கிழமை விலகிய மெரின் ஜாய், வேறொரு இடத்தில் பணிக்குச் சேர முடிவெடுத்திருந்தார். இதுபோன்ற சூழலில் கடந்த செவ்வாய்க்கிழமை அந்தப் பெண்ணை அவரது கணவர் பிலிப் மேத்யூ, சரமாரியாக கத்தியால் குத்தினார். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் மீது காரை ஏற்றி ஓட்டிவிட்டு மேத்யூ தப்பினார். இதன்பிறகு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மெரின் ஜாய் உயிரிழந்தார்.
இக்கொடூரச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அளித்த தகவலின் பேரில், புளோரிடா காவல்துறையினர், ஒரு விடுதியில் இருந்த மேத்யூவைப் பிடித்தனர். அப்போது அவர் கத்திக்குத்து காயங்களுடன் இருந்துள்ளார். தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படும் மேத்யூ மீது புளோரிடா காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர். மெரின் ஜாயும் அவரது கணவர் பிலிப் மேத்யூவும் குடும்பப் பிரச்னை காரணமாக கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதன் காரணமாகவே மெரின் ஜாயை பிலிப் மேத்யூ கொன்றதாக புளோரிடா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்கலாமே: அதிபர் தேர்தலை ஏன் தள்ளி போட கூடாது? – ட்ரம்ப்