“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.
குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாகவே நாட்டின் தினசரி பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
இதனிடையே கடந்த 14 ஆம் தேதி முதல் அமெரிக்காவில் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பைடன், மைக் பென்ஸ் உள்ளிட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இதன்மூலம் மக்களுக்கு தடுப்பூசி மீதான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசிக்கும் ஓப்புதல் கிடைத்த நிலையில் அதனை துணை அதிபராக பொறுப்பேற்கவிருக்கும் கமலா ஹாரிஸ் போட்டுக்கொண்டார்.
அமெரிக்காவில் இதுவரை 43 லட்சத்து 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது. இதில் சிலருக்கு மட்டும் ஒவ்வாமல் ஏற்பட்டது.
இந்நிலையில் வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு போடப்பட்டுவருகிறது.
இந்நிலையில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 32 வயதான பெண் மருத்துவருக்கு, தடுப்பூசி போட்ட சில மணி நேரங்களில் வலிப்பு, மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து, அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
முதல்கட்ட சிகிச்சையில், பெண் மருத்துவருக்கு மூளை மற்றும் முதுகு தண்டில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாக அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.