அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் வளர்ப்பு பாட்டியான சாரா கென்யாவிலுள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 99.
முன்னாள் அதிபர் ஒபாமா இஸ்லாமியர் என்றும் கென்யாவில் பிறந்தவர் என்றும் எழுந்த விமர்சனங்களுக்கு மாமா சாரா என அழைக்கப்படும், அவரது வயதான பாட்டி கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தார்.
ஒபாமாவின் தாத்தாவுக்கு மூன்றாவது தாரமான மாமா சாரா, வயது முதிர்வால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
சாராவுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதியானது.
கடந்த 2008 ஆம் ஆண்டு பராக் ஒபாமா அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றபோடு அவரை வளர்த்த பாட்டி சாராவும், அவரது கிராமமும் கவனம் பெற்றன.
சாரா ஒபாமாவின் மறைவுக்கு கென்ய அதிபர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சாரா ஒபாமாவின் பாட்டி மட்டுமல்ல, கென்யாவில் பல குழந்தைகளுக்கு கல்வியையும், ஏழைகளுக்கு உணவுப்பொருட்களையும் வழங்கி தொண்டு செய்தவராவார்.
ஒபாமா அதிபர் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு கடந்த 2018 ஆம் ஆண்டு தனது பாட்டி, சாராவை பார்க்க அவரது கிசுமு கிராமத்திற்கு சென்றார் என்பது குறிப்பிடதக்கது.