இந்திய கடற்படைக்கு புதிய வகை இலகு ரக ஹெலிகாப்டர்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இருந்து விரைவில் வர இருப்பதாக இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்திய தலைமை தளபதி அஜேந்திரா பகதூர் சிங் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தில் 96வது ஹெலிகாப்டர் பைலட் பயிற்சி நிறைவு விழா இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்துகொண்ட தலைமை தளபதி அஜேந்திரா பகதூர் சிங், கடற்படை வீரர்களின் அணிவகுப்பை திறந்த ஜீப்பில் சென்று பார்வையிட்டு பின்னர் அவர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
தொடர்ந்து பயிற்சியை நிறைவு செய்த 7 பைலட்டுக்கு சான்றிதழ்களையும் சிறப்பாக பயிற்சி பெற்றவர்களுக்கு கேடயங்களையும் வழங்கினார்.
பயிற்சியின்போது அனைத்துப் பிரிவுகளிலும் சிறப்பாக பயிற்சி பெற்ற பவன் ராஜ் என்ற பைலட்டுக்கு கேரள கவர்னர் சுழற்கோப்பை விருதினை அவர் வழங்கினார்.
இவ்விழாவில் பேசிய தலைமை தளபதி அஜேந்திரா பகதூர் சிங், “இந்திய கடற்படையில் விரைவில் மேம்படுத்தப்பட்ட அதிநவீன இலகு ரக ஹெலிகாப்டர் சேர்க்கப்பட உள்ளது.
எம் எச் 60 ஆர் என்ற மேம்படுத்தப்பட்ட அதிநவீன ஹெலிகாப்டர் சேர்க்கப்படவுள்ளது.
புதிய வகை இலகு ரக ஹெலிகாப்டர்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இருந்து விரைவில் வரவுள்ளது. இதன் மூலம் இந்திய கடற்படையின் பலம் மேம்படுத்தப்படும்” என தெரிவித்தார்.