பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
1901 ஆம் ஆண்டு முதன்முதலில் 5 பிரிவுகளின் கீழ் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதையடுத்து 1969 ஆம் ஆண்டு ரிக்ஸ் வங்கி நன்கொடையாக அளித்த பணத்தைக் கொண்டு நோபல் பட்டியலில் பொருளாதாரத்துக்கான பரிசு சேர்க்கப்பட்டது.
ஆண்டுக்கு ஒருமுறை 6 பிரிவுகளின் கீழ் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு நோபல் பரிசுக்காக 211 தனிநபர்கள் மற்றும் 107 அமைப்புகள் என மொத்தம் 318 பேர் நோபல் பரிசுக்கான போட்டியில் உள்ளனர்.
இவர்களின் தகுதியானவர்கள் ஒவ்வொரு பிரிவிலும் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் 2020 ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்துக்குரிய நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
அமெரிக்காவை சேர்ந்த பால் மில்க்ரோம், ராபர்ட் வில்சன் ஆகிய இருவருக்கும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏல முறைகள் குறித்த பொருளாதார ஆராய்ச்சிக்காக இருவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமான முறையில் ஏலம் விட முடியாத ரேடியோ, மின் காந்த அலைகள் போன்றவற்றை விற்பதற்கு இருவரின் ஆராய்ச்சி பயன்படுகிறது.
இருவரும் வடிவமைத்துள்ள ஏல முறை விற்பவர்கள், வாங்குபவர்கள், வரி செலுத்துபவர்கள் என அனைவருக்கும் நன்மை தரும் வகையில் இருப்பதாக நோபல் பரிசுக் குழு தெரிவித்துள்ளது.
1994 ஆம் ஆண்டில் ஸ்பெக்ட்ரம் விற்பனைக்காக அமெரிக்க அரசு பால்மிக்ரோம், ராபர்ட் வில்சன் உருவாக்கிய ஏல முறையை பயன்படுத்தியது. அதை தற்போது பல நாடுகள் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே: தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி – ட்ரம்ப்
அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…