அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கமலா ஹாரிஸ், பூர்வீக கிராமமான துளசேந்திரபுரம் வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அதன் மூலம் இந்திய வம்சாவளி மற்றும் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால், அமெரிக்க வாழ் தமிழர்கள் மட்டுமின்றி கமலா ஹாரிஸின் பூர்வீக கிராமான துளசேந்திரபுரம் மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கமலா ஹாரிஸின் வெற்றியை கொண்டாடும் வகையில் துளசேந்திரபுர மக்கள் வாசல்களில் வண்ண கோலமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
துளசேந்திரபுரம் கிராமத்தில் உள்ள தர்ம சாஸ்தா ஆலயத்தில் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பும், தேர்தல் முடிவுக்கு பின்பும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
மக்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ந்தனர். தங்கள் வீட்டில் ஒருவர் அமெரிக்க துணை அதிபரானது போன்று கமலா ஹாரிஸ் வெற்றியை கொண்டாடிவந்தனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் என்ற பெருமையை பெற்றிருக்கும் கமலா ஹாரிஸ், அவரது பதவிக்காலத்தில் துளசேந்திரபுரம் வர வேண்டும் என்பதே அந்த கிராம மக்களின் ஒரே எதிர்பார்ப்பாக உள்ளது.
முன்னதாக ஜனநாயக கட்சி தலைமையிலான புதிய அரசு நிர்வாகம் இந்தியா-அமெரிக்கா உறவை பலப்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் என பைடனின் பிரசார குழு கொள்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தமிழர் துணை அதிபரானதன் மூலம் அமெரிக்க- இந்தியா இடையிலான உறவு வலுப்பெற வேண்டும் என்பதே தமிழக மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிக்கலாமே: அமெரிக்க அதிபரின் மருத்துவக்குழுவில் ஈரோடு பெண்
அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…