அமெரிக்காவில் மற்றொரு கறுப்பினத்தவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மின்னபோலிஸ் நகரில் கடந்த மே 25 ஆம் தேதி கருப்பின இளைஞர் ஜார்ஜ் ஃபிளாய்ட் காவலர்களால் கொல்லப்பட்டதை கண்டித்து அங்கு போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது காவலர்கள் கருப்பினத்தவர்களிடம் கொடூரமாக நடந்துகொள்வதாகவும், இனவெறி மற்றும் மதவெறியை வெளிகாட்டுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. கொரோனா அச்சுறுத்தலுக்கு நடுவில் கிட்டத்தட்ட ஒரு மாதமாக நடைபெற்ற பிளாக் லைவ் மேட்டர்ஸ் போராட்டத்தால் அமெரிக்காவே ஸ்தம்பித்தது. ஜார்ஜ் பிளாயிட் காவலர்களால் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து கறுப்பினத்தவரின் வாழ்க்கை மற்றும் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் பிளாக் லைவ்ஸ் மேட்டர்ஸ் (BLACK LIVES MATTERS) வாசகம் வலுப்பெற்றுவருகிறது. மேலும் ட்ரம்ப் ஆட்சிக்காலத்திலேயே கறுப்பினத்தவர்களுக்கு எதிராக அநீதிகள் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், பிலாடெல்பியா நகரில் நடந்த பிளாக் லைவ்ஸ் மேட்டர்ஸ் போராட்டத்தில் 27 வயதான வால்டர் வாலஸ் என்ற கறுப்பினத்தவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் கையில் கத்தி வைத்திருந்ததாகவும், எச்சரிக்கை விடுத்தும் கத்தியை கீழே போட மறுத்ததால் சுட்டுக்கொலை செய்தாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதை கண்டித்து வீதிகளில் இறங்கி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. கற்கள், கண்ணாடி பாட்டில்கள் உள்ளிட்டவற்றால் போலீசாரை தாக்கிய போராட்டக்காரர்கள் போலீசாரின் கார்களுக்கும் தீ வைத்தனர். போலீசாருகும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் முப்பதுக்கும் மேற்பட்ட காவலர்கள் படுகாயமடைந்தனர்.
இதையும் படிக்கலாமே: அதிபர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்? தெரியுமா?
அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…