அதிபர் ட்ரம்ப் தேர்தலில் போட்டியிடுவதை கண்டித்து போராட்டம்!

Protesters

அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதை எதிர்த்து வெள்ளை மாளிகை முன்பு போராட்டம் நடைபெற்றது.

அமெரிக்க அதிபர் பதவிக்கு வருகிற நவம்பர் மாதம் 3 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிடுகிறார். கொரோனா பரவலுக்கு மத்தியிலும் பல மாகாணங்களில் அதிபர் ட்ரம்ப், தீவிர தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகிறார். ஆனால் கொரோனா பரவலை தடுக்க தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடப்போவதில்லை என ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.

Protesters

மாறாக இணையவழி பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ள ஜோ பிடன் அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அரசு கொரோனா விவகாரத்தை திறம்பட கையாளவில்லை, கறுப்பின மக்களுக்கு ட்ரம்ப் ஆட்சியில் பாதுகாப்பில்லை எனக் கூறி வாக்குகளை சேகரித்துவருகிறார். கொரோனா உள்பட பல்வேறு பிரச்னைகளில் டொனால்டு ட்ரம்ப்புக்கு எதிராக மக்களின் மனநிலை மாறியிருப்பதால், தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடெனுக்கு வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக கருத்துக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது. 2016 தேர்தலிலும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தனக்கு எதிராக இருந்ததாகவும், ஆனால் தேர்தல் முடிவுகள் அதனை பொய்யாக்கியதாகக் கூறும் ட்ரம்ப் தரப்பு, தற்போதும் அப்படியே நடக்கும் என நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

இந்நிலையில் குடியரசு கட்சியின் தேசிய மாநாட்டில் ட்ரம்ப் ஏற்புரை ஆற்றி கொண்டிருந்த போது வெள்ளை மாளிகை முன்பு ட்ரம்ப் எதிர்ப்பாளர்கள் ஒன்று திரண்டு விசில் அடித்து தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். ட்ரம்பின் உரை நேரலையை இடையூறு செய்யும் வகையில் போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

இதையும் படிக்கலாமே: கொரோனாவால் உலக பொருளாதாரமே ஸ்தம்பிக்கும் நிலையில் ரூ.15 லட்சம் கோடி சொத்து சேர்த்த அமெரிக்கர்!

அமெரிக்க செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook- https://www.facebook.com/tamilmicsetusa
FB Group- https://www.facebook.com/groups/usatamilnews/
Twitter – https://twitter.com/tamilmicsetusa