அமெரிக்க நாடாளுமன்றத்தின்மீது தாக்குதல் நடத்தியவர்கள் பெரும்பாலும் ட்ரம்பின் ஆதரவாளர்கள். அதி தீவிரமான வலதுசாரிகள்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உலகைக் காக்க வந்தவர், சாத்தான்களை வழிபடும் கூட்டத்தை அழிப்பதற்காகவே அவர் அவதாரம் எடுத்திருக்கிறார். குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமை செய்யும் கொடியவர்களுக்கு எதிரான ரகசியப் போரை அவர் நடத்திக் கொண்டிருக்கிறார்.இப்படியெல்லாம் நம்பிக்கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்.
இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பல லட்சம் பேரைக் கொண்ட பெருங்கூட்டம் ட்ரம்பை கடவுள் போல நம்பிக்கொண்டிருக்கிறது. இந்தக் கூட்டம் நம்பிக்கொண்டிருக்கும் பெருஞ்சதிக் கோட்பாட்டின் பெயர் க்யூஅனான். சுருக்கமாக க்யூ.
க்யூ என்பதுதான் க்யூஅனான் கூட்டத்தாரின் குறியீடு. மாட்டுக் கொம்பு தான் இவர்களின் அடையாளம். கொடிகள், பதாகைகள் என க்யூ என்ற குறியீட்டுடன் இவர்கள் பொதுவெளியில் சுற்றுகிறார்கள்.
இவர்களது நம்பிக்கையின்படி, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் அரசியல்வாதிகள், பெரு முதலாளிகள், ஊடகத்தினர் போன்றோர் ஈடுபடுகிறார்கள்.
முன்னாள் அதிபர் ஒபாமா, ஹிலரி கிளிண்டன், ஊடகப் பிரபலமான ஆபரா வின்ஃபிரே உள்ளிட்டோர் கொடூரமான குற்றவாளிகள் என்றும், இவர்களைப் போன்றவர்கள் உலகம் முழுக்க ரகசியமான அரசாங்கத்தை நடத்தி வருகிறார்கள் என்பதுமே க்யூஅனான் மக்களின் நம்பிக்கை.
இவர்களைத் தண்டிப்பதற்காகவே அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பாடுபட்டு வருகிறார் என க்யூஅனான் கூட்டத்தார் கூறுகிறார்கள்.
சில வரலாற்று நிகழ்வுகள், செய்திகள், குறியீடுகளை தங்களுக்கு ஆதாரங்களாக இவர்கள் எடுத்துவைக்கிறார்கள்.
ட்ரம்புக்கு முன்பு அதிபராக இருந்த பலர் ரகசிய அரசின் ஏஜென்டுகளாக இருந்தவர்கள் என்றும் இவர்கள் கூறுகிறார்கள். இவற்றில் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. சாதாரணமாக நம்பும்படியாகவும் இல்லை.
டொனால்ட் ட்ரம்ப் ஏதாவது பேசினால் அதை தங்களுக்கான குறியீடாக இவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள்.
உலகைக் காப்பாற்ற வந்த ட்ரம்பை பதவியில் இருந்து அகற்றுவதற்கு ரகசிய அரசாங்கத்தினர் சதி செய்கிறார்கள் என்ற எண்ணம் தான் க்யூஅனான் கூட்டத்தினரின் வெறித்தனமாக கோபத்திற்கு காரணம். இது நாடாளுமன்ற வன்முறைக்குக் காரணமாக அமைந்துள்ளது.
இதையும் படிக்கலாமே: அதிபர் தேர்தலில் பைடன் வெற்றிப்பெற்றதாக அதிகாரபூர்வ அறிவிப்பு
அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…