செப்டம்பர் மாதம் இந்திய அரசு புதிதாக மூன்று வேளாண் சட்டங்களை அறிமுகப்படுத்தியது. இது தங்களின் விளைப்பொருட்களை விற்பனை செய்ய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் இச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய விவசாயிகள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தலைநகர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். ஆனால் இந்திய அரசு அவர்களின் போராட்டத்துக்கு செவி சாய்க்கவில்லை.
பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் மத்திய அரசுடனான விவசாயிகளின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம், போராட்டம், ரயில் மறியல் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டனர்.
தொடர்ந்துஅமைதியாக போராடிவரும் விவசாயிகளின் போராட்டத்துக்கு கனடா மற்றும் பிரிட்டன் அரசுகள் ஆதரவு தெரிவித்தன.
இந்நிலையில் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரான பிரமிளா ஜெயபால் உள்ளிட்ட ஏழு எம்பிக்கள் வெளியுறவுத்துறை அமைச்சர் பாம்பியோவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அமெரிக்காவில் வாழக்கூடிய பல இந்திய வம்சாவளியினர் இந்த விவகாரத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். காரணம் அவர்களின் குடும்ப சொத்துக்கள் பஞ்சாப் மாநிலத்தில் இருப்பதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தை தொடர்பு கொண்டு விவசாயிகளின் போராட்டத்துக்கு தங்களின் கவலையை தெரிவிக்க வேண்டும். எம்பி என்ற முறையில் இந்திய நாட்டின் கொள்கைகளுக்கு மதிப்பு வழங்க வேண்டும் என்பது தங்களுக்கு தெரியும், ஆனால் அமைதியாக போராடும் விவசாயிகளின் பொருளாதார இழப்பு எத்தகையது என்பதை இந்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னதாக அமெரிக்காவின் ஆளுங்கட்சி எம்பிக்களான டக் லாமால்பா, ஜோஸ் ஹார்டர், டி.ஜே.காக்ஸ், ஆன்டி லீவின் உள்ளிட்டோர் இந்திய விவசாயிகளின் அமைதியான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இப்படி அமெரிக்கவாழ் இந்தியர்கள் மட்டுமின்றி ஏராளமான அமெரிக்கர்கள் மத்தியில் இந்திய விவசாயிகளின் போராட்டம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்கலாமே: அமெரிக்காவில் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது!
அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…