கடந்த நவம்பர் மாதம் 3 ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிப்பெற்றார். 306 தேர்வாளர்கள் வாக்குகளை பைடன் பெற்றிருந்தார்.
அவரது வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் அதற்கான சான்றை வழங்கும் நடைமுறை வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டத்தில் நடைபெறவிருந்தது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ட்ரம்ப் ஆதரவாளர்கள், நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் ஒடுக்க முயற்சித்தால் மோதல் மூண்டது.
மிகப்பெரும் பிரச்னைகளையெல்லாம் கடந்து அதிபராக பைடன் பதவியேற்றார்.
இந்நிலையில் பைடன் மீது தவறான மற்றும் நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளை ட்ரம்ப் ஆதரவாளர்கள் மூலம் பரப்ப ரஷ்ய அதிபர் புதினும், அவரது நிர்வாகமும் முயற்சித்ததாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. மேலும் ட்ரம்பின் தனிபட்ட வழக்கறிஞரான ரூடி ஜியுலானிக்கு இந்த சம்பவத்தில் அதிக பங்கு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஏற்கனவே ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னிக்கு விஷம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் அதிபர் புதினுக்கும், அவரது நிர்வாகத்துக்கும் அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது.
மேலும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அலெக்சி நவால்னியை விடுவிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், அதிபர் தேர்தலில் புதின் தலையீடு குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெக்க அதிபர் ஜோ பைடன், “புதின் ஒரு கொலையாளி, தன் நிர்வாகத்தை சீர்கெடுக்க வந்தவர், சொந்த நாட்டு எதிர்க்கட்சி தலைவரையே கொன்றவர்” என விமர்சித்தார்.
இதையடுத்து வாஷிங்டனில் உள்ள அமெரிக்காவுக்கான ரஷிய தூதர் அனடோலி அன்டோனோவ்வை நாடு திரும்ப ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.
ரஷ்யா- அமெரிக்க உறவுகள் மோசம் அடைவதம் சீரடைவதும் அமெரிக்காவிடமே இருக்கிறது என ரஷ்ய துணை வெளியுறவு மந்திரி செர்ஜி ரியாப்கோவ் தெரிவித்தார்.