அதிபர் தேர்தலை தள்ளி போடலாமா என ட்ரம்ப் தெரிவித்த நிலையில், அதற்கு அவருடைய சொந்த கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கொரோனா பரவல் மற்றும் தபால் வாக்குகளில் முறைகேடு நடைபெற வாய்ப்புள்ளதால் நவம்பர் 3ஆம் தேதி நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலை தள்ளி போடலாமா என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் யோசனை தெரிவித்துள்ளார். தபால் வாக்குகளால் மோசடிகள் நடைபெற வாய்ப்பிருப்பதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்தாலும், தேர்தலை ஒத்திவைப்பது அவ்வளவு எளிமையான விசயம் அல்ல.1845ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி , அமெரிக்காவில் அதிபர் மற்றும் துணை அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் எப்போது நடத்தப்பட வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டது. இதன்படி நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை, நவம்பர் மாதத்தில் வரும் முதல் திங்கள்கிழமைக்கு அடுத்த செவ்வாய்கிழமை நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற வேண்டும்.
ஒரு வேளை மாதம் தொடங்குவதே செவ்வாய்கிழமையாக இருந்தால் அடுத்த வாரத்தில் வரும் செவ்வாய்கிழமை தான் தேர்தல் நடக்கும். இந்த சட்டப்படி பார்த்தால் நடப்பாண்டில் நவம்பர் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற வேண்டும்.அதே போல தேர்தல் நேரத்தை நியமிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே உண்டு . அதிபருக்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லை என்கிறது அமெரிக்கா அரசமைப்பு . ஒருவேளை தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்றால் முதலில் அமெரிக்கா பிரதிநிதிகள் சபை அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். பின்னர் செனட் சபை ஒப்புதல் அளித்து சட்டமியற்றப்பட வேண்டும். ஆனால் தற்போது அமெரிக்க பிரதிநிதிகள் அவையில் ஜனநாயக கட்சியினரே பெரும்பான்மையுடன் இருப்பதால் ட்ரம்பின் யோசனைக்கு நிச்சயம் ஆதரவு கிடைக்காது.
அமெரிக்கா வரலாற்றிலேயே இதுவரை ஒருமுறை கூட அதிபர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. 1918 ஆம் ஆண்டு ஸ்பானிஷ் காய்ச்சல் காரணமாக இடைக்காலத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. 1930 ஆம் ஆண்டு கடுமையான சூறாவளி மற்றும் இயற்கை சீற்றத்திற்கு நடுவேவும் அமெரிக்கர்கள் தேர்தலை நடத்தி வாக்களித்துள்ளனர். 1864 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போரின் காரணமாக தேர்தலை ஒத்திவைக்க குடியரசு கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. சுமார் 3,000 உயிர்களை பலி வாங்கிய 9/11 தீவிரவாத தாக்குதலை அடுத்து 2004 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த அதிபர் தேர்தலை ஒத்திவைக்க கோரிக்கை எழுந்தது. ஆனால் அப்போதும் தேர்தல் வெற்றிகரமாகவே நடைபெற்றது.
அமெரிக்காவில் போர், இயற்கை பேரழிவுகள், பயங்கரவாத தாக்குதல்கள், தொற்றுநோய்கள் போன்ற எந்தவொரு இக்கட்டான சூழல் ஏற்பட்டாலும் தேர்தல் ரத்து, ஒத்திவைப்பு என்ற பேச்சுக்கு இடமே இல்லை.
இதையும் படிக்கலாமே: கொரோனா… கோடீஸ்வரர் பில் கேட்ஸை கிண்டலடித்த எலான் மஸ்க்!