அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து இன்னும் சில தினங்களில் விலக இருக்கும் ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் 3 ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றார்.
துணை அதிபராக கமலாஹாரிஸ் தேர்வானார். இவர்கள் இருவரும் வரும் 20 ஆம் தேதி முறைப்படி பதவியேற்கவிருக்கின்றனர். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.
இதனிடையே பைடனின் வெற்றியை உறுதி செய்யும்பொருட்டு தேர்தல் சபை தேர்வாளர்கள் அளித்த வாக்குகள் நாடாளுமன்றத்தில் எண்ணப்பட்டு, பைடனின் வெற்றியை அங்கீகரித்து சான்றிதழ் அளிக்கு நிகழ்வு நடந்தது.
அப்போது, நாடாளுமன்றத்தின் அருகே திரண்ட ட்ரம்ப் ஆதரவாளர்கள், நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்றனர்.
இதனால், ஏற்பட்ட கலவரத்தில் ஒரு பெண், ஒரு போலீஸ் அதிகாரி உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர்.
உலகையே அதிரவைத்த இந்த நாடாளுமன்ற வன்முறைக்கு ட்விட்டரில் ட்ரம்ப் வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவிட்ட கருத்துகளே காரணம் எனக் கூறப்படுகிறது.
இதனால், அவரின் தனிப்பட்ட ட்விட்டர் (@realDonaldTrump) கணக்கை ட்விட்டர் நிறுவனம் முடக்கியது. உடனே @POTUS என்ற அமெரிக்க அதிபரின் அதிகாரபூர்வ கணக்கிலிருந்து ட்ரம்ப் ட்வீட் செய்யத் தொடங்கினார். ஆரம்பத்தில் அப்பதிவுகள் நீக்கப்பட்டன.
பின்னர் அந்த கணக்கும் முடக்கப்பட்டது. அதிபர் பதவியை சுமுகமாக பரிமாற ஒத்துழைக்க மறுக்கும் ட்ரம்ப், மீண்டும் வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்துப் பதிவிடலாம் என்பதால் அந்தக் கணக்கை நீக்குவதாக ட்விட்டர் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
மேலும் அந்த பக்கத்தில் பதிவிடப்பட்ட அனைத்து ட்வீட்களும் நீக்கப்பட்டன. முன்னதாக ட்ரம்பின் ஃபேஸ்புக், ட்விட்ச், ஸ்னாப் சாட் உள்ளிட்ட மற்ற சமூக ஊடகங்களும் முடக்கப்பட்டது குறிப்பிடதக்கது.
தனது தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு மற்றும் அதிபரின் கணக்கு ஆகியவற்றை முடக்கிய ட்விட்டர் நிறுவனம் பேச்சு உரிமைக்கு தடையாக இருப்பதாகவும், தன்னை அமைதியாக இருக்க செய்வதற்காக கணக்கை முடக்கியிருப்பதாகவும் சாடினார்.
சுதந்திரத்தைத் தடை செய்வதாகவும், தன்னைப் பேசாமல் அமைதியாக இருக்கச் செய்வதற்காக தனது கணக்கை நீக்கியிருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படிக்கலாமே: ட்ரம்ப்பை கடவுளாக நம்பும் க்யூஅனான் மக்கள்! யார் இவர்கள்?
அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…