அமெரிக்காவில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு எப்போது தடுப்பூசி போடப்படும் என அமெரிக்காவின் உயர்மட்ட மருத்துவ ஆலோசகர் அந்தோனி ஃபாசி தெரிவித்துள்ளார்.
“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.
குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
இதனிடையே கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி முதல் அமெரிக்காவில் பைசர் மற்றும் மாடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
மேலும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் புதிய தடுப்பூசிக்கும் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அந்தோனி ஃபைசன், “முதலில் Older Children எனப்படும் 11 முதல் 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடவும், அதன்பின் 3 முதல் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் தடுப்பூசி வழங்க திட்டமிட்டுவருகிறோம்.
இந்த ஆண்டு இறுதி அல்லது 2022 ஆரம்பத்திலிருந்து பள்ளி குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படும்.
பள்ளி குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதால் லட்சக்கணக்கான குழந்தைகள் விரைவில் பள்ளிகளுக்கு திரும்ப முடியும்.
வீட்டில் குழந்தைகளை வைத்து சமாளிக்கும் பெற்றோர்களின் சுமைகளும் குறையும்.
அனைத்து கொரோனா தடுப்பு மருந்துகளும் குழந்தைகள் மீது பரிசோதிக்கப்பட்டுவருகிறது” எனக் கூறினார்.