அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட செவிலியர் நேரலையில் மயங்கிச் சரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனில் பைசர் தடுப்பூசி எடுத்துக்கொண்ட இருவருக்கு அலர்ஜி ஏற்பட்டதை அடுத்து, உணவு மற்றும் மருந்துகளால் அலர்ஜி ஏற்படுபவர்கள் இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டாம் என அந்நாட்டு அரசு அறிவுறுத்தியது. இந்நிலையில் கடந்தவாரம் அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தை சேர்ந்த சுகாதார பணியாளர்கள் இருவருக்கு, பைசர் தடுப்பூசியை போட்டுக்கொண்ட பின் தீவிர அலர்ஜி பிரச்னையால் பாதிக்கப்பட்டதாகவும், சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து அவர்கள் நலமாக இருப்பதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்தது.
இந்நிலையில் அமெரிக்காவின் டென்னசியில் செவிலியராக பணிபுரியும் டோவர்(30), என்பவர் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார். தடுப்பூசி போட்டுக்கொண்டு தனது அனுபவம் பற்றி உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றுக்கு டோவர் பேட்டியளித்தார். தடுப்பூசி போட்டு 17 நிமிடங்களில், நேரலையில் பேட்டி கொடுத்துக்கொண்டிருந்த டோவர் திடீரென மயங்கி விழந்தார். அருகிலிருந்த இரண்டு சக ஊழியர்கள் அவரைத் தாங்கிப் பிடித்து அமரவைத்தனர்.
இதனையடுத்து பைசர் தடுப்பூசி பாதுகாப்பானது அல்ல என சில விஷமிகள் பிரச்சாரத்தை தொடங்கின. ஆனால் செவிலியர் டோவருக்கு vasovagal syncope என்ற பிரச்னை இருந்ததாகவும், நீண்ட நேரம் நின்றால் அவருக்கு இதுபோன்ற பாதிப்பு இருக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. கடந்த வாரம் பைசர் நிறுவனத்திடம் இருந்து 2.9 மில்லியன் தடுப்பூசிகளைப் அமெரிக்க இறக்குமதி செய்தது. முன்னதாக தடுப்பூசி போட்ட சிலருக்கு முகம் மற்றும் உடலில் எரிச்சல், கண்களில் வீக்கம், தலைச்சுற்றல், மூச்சுவிடுதலில் சிரமம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே: பைடனை வெள்ளை மாளிகைக்குள் அனுமதிக்க முடியாது: அதிபர் ட்ரம்ப்
அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…