அமெரிக்காவில் துப்பாக்கிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பான உத்தரவுகளை அதிபர் ஜோ பைடன் பிறப்பித்துள்ளார்.
தொடர்ந்து துப்பாக்கி சட்டங்கள் கடுமையாக்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துவந்த சூழலில், அண்மைக்காலமாக அமெரிக்காவில் இனவெறி கொலைத் தாக்குதல்கள் தொடர்ந்து அரங்கேறி கொண்டிருக்கிறது. சமீபத்தில் கரோலினாவில் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்த ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “அமெரிக்காவில் தினமும் 106 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்படுகின்றனர். குறிப்பாக கொரோனா ஊரடங்கில் வன்முறைகள் அதிகரித்து தர்ம சங்கடமான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.
நாட்டில் கைத்துப்பாக்கிகள் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க புதிய விதியை உருவாக்க நீதித்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும் இதற்காக அந்ததந்த மாகாணங்கள் சொந்த சட்டத்தை உருவாக்க அறிவுறுத்தியுள்ளேன். இச்சட்டம் ஆபத்தாக கருதப்படுபவர்களிடம் இருந்து துப்பாக்கிகளை அகற்ற அங்கீகாரம் வழங்கும்.
துப்பாக்கி வன்முறையும் தொற்றுநோயாக பரவிவருகிறது. துப்பாக்கி கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இந்த நடவடிக்கைகள் குறைவு. எனினும் இது ஆரம்பம் மட்டுமே” என பேசினார்.