சர்வதேச அளவில் 23 நாடுகளில் கொரோனா வைரசானது 3 வகைகளில் உருமாறி, மின்னல் வேகத்தில் பரவி வருவது மக்களை அச்சமடைய வைத்துள்ளது.
பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் வல்லரசு நாடான அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகளுக்கும் பரவி இருக்கிறது.
தற்போதைய நிலவரப்படி அமெரிக்கா, நெதர்லாந்து, டென்மார்க், பிரான்ஸ், ஐக்கிய அமீரகம், இத்தாலி, ஸ்பெயின், ஸ்விட்சர்லாந்து, ஸ்வீடன், பின்லாந்து, அயர்லாந்து, ஜெர்மனி, ஐஸ்லாந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
அதே போல கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான்,சிங்கப்பூர், தென்கொரியா, இந்தியா, பாகிஸ்தான், ஜோர்டன், லெபனான் ஆகிய நாடுகளில் பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் பரவி இருப்பது தெரிய வந்துள்ளது.
உருமாறிய வைரஸ் பரவும் வேகம் அதிகமாக இருப்பதால் பிரிட்டனில் ஒரே நாளில் 53 ஆயிரம் பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கொலராடோ மகாணத்திலும் பி117 என்ற பிரிட்டனில் உருமாறிய கொரோனா தொற்று பரவியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனை அம்மாநில ஆளுநர் ஜாரெட் பொலிஸ் உறுதி செய்துள்ளார். பாதிக்கப்பட்ட நபர் 20 வயதுடைய ஆண் என்றும், அவர் அண்மையில் எங்கும் பயணம் செய்யவில்லை என்றும் அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட இளைஞர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மேலும் அவர் பிரிட்டனிலிருந்து திரும்பிய யாருடனாவது தொடர்பில் இருந்தாரா என்பதை கண்டறியும் பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதே போல் தென் ஆப்ரிக்காவில் பரவி வரும் மற்றொரு வகையான உருமாறிய கொரோனா வைரஸ் பிரிட்டன் மற்றும் ஜப்பானிலும் பரவி இருப்பது தெரிய வந்துள்ளது.
இதனிடையே தென் ஆப்ரிக்காவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.
முகக்கவசம் அணியாதவர்களுக்கு 6 மாதங்கள் தண்டனை விதிக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.
நைஜீரியாவில் மற்றொரு வகையான உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருவதாக ஆப்ரிக்க நாடுகளுக்கான மருத்துவர்கள் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.
உருமாறிய கொரோனா வைரஸால் அச்சம் ஏற்பட்டுள்ள அதே வேளையில் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமடைந்துள்ளன.
முதன்முதலில் கொரோனா வைரஸ் பரவிய சீனாவின் வூஹான் நகரில் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், தடுப்பூசி போடாதவர்களின் பட்டியலை தயார் செய்து பராமரிப்பதாக ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிக்கலாமே: அமெரிக்க அதிபரின் டிஜிட்டல் குழுவில் இந்திய பெண்!
அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…