அமெரிக்க அதிபர் அரியணையில் ஜோ பைடன் அமர்வது உறுதியாகிவிட்ட நிலையில் இந்தியாவை சுமுகமாகதான் அணுகுவார் என வெளியுறவுத்துறையில் அனுபவம் வாய்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
சர்வதேச அரங்கில் மிகப்பெரிய சக்தியாக வளர்ந்து வரும் சீனாவை சமாளிப்பது ஜோ பைடனுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று கூறுகிறார் அமெரிக்காவுக்கான முன்னாள் இந்திய தூதர் மீரா சங்கர்.
சீனாவை கட்டுக்குள் வைக்க இந்தியா போன்ற நாடுகளின் உதவி பைடனுக்கு நிச்சயம் தேவை என்கிறார் மீரா சங்கர்.
சீனாவுடன் எல்லை பிரச்னைகள் அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்காவின் ஆதரவும் இந்தியாவுக்கு தேவை என்றும் கூறுகிறார் இவர்.
எனவே இது போன்ற பரஸ்பர தேவைகளின் அடிப்படையில் இரு நாடுகளின் உறவுகள் நிச்சயம் மேலும் வலுப்படும் என உறுதிபடக் கூறுகிறார் அமெரிக்க அரசியல் வியூகங்களை நன்கறிந்த மீரா சங்கர்.
பைடன் ஆட்சிக்காலத்தில் இந்திய – அமெரிக்க உறவுகள் நேர்மறையாகவே இருக்க வாய்ப்புகள் அதிகம் என்கிறார் மற்றொரு முன்னாள் தூதர் ராகேஷ் சூட்.
பைடன் சீனாவை எப்படி அணுகுகிறார் என்பதை பொறுத்தே அமெரிக்காவுடனான இந்திய உறவுகள் இருக்கும் என்கிறார் மற்றொரு முன்னாள் தூதர் விவேக் கட்ஜு.
பைடன் துணை அதிபராக இருந்த போது இந்தியாவுடனான உறவுகளை மேம்படுத்த ஆர்வம் காட்டியதாகவும் அதேதான் தற்போதும் நடக்கும் என்கிறார் ரஷ்யாவுக்கான முன்னாள் இந்திய தூதர் பி.எஸ்.ராகவன்.
பைடன் இந்தியாவுடன் அணுசக்தி ஒப்பந்தம் ஏற்பட முக்கிய பங்கு வகித்ததையும் இந்தியாவிற்கு எதிராக அமெரிக்கா விதித்த தடைகளை நீக்க அதிபர் புஷ்ஷுக்கு அப்போது செனட் கமிட்டி தலைவராக இருந்த போது கடிதம் எழுதியதையும் சுட்டிக்காட்டுகின்றனர் வெளியுறவுத் துறையில் ஆழ்ந்த அனுபவம் பெற்றவர்கள்.
அரசியல், பாதுகாப்பு ரீதியான உறவுகள், வலுப்படுவது உள்ளிட்டவற்றில் இந்தியாவுக்கு ஜோ பைடன் தலைமையிலான அரசு உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் வர்த்தக உறவை வலுப்படுத்த நமது இளைஞர்களின் வேலை வாய்ப்பிலிருந்து ஏற்றுமதி வணிகம் வரை இந்தியாவுக்கு பெரும் ஆதாயங்களை ஜோ பைடன் தருவார் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே: அமெரிக்காவின் 46ஆவது அதிபரானார் ஜோ பைடன்!
அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…