அமெரிக்க துணை அதிபராக இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ் பதவியேற்று இருப்பது அமெரிக்கா – இந்தியா இடையிலான உறவை மேலும் வலுப்படும் என வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் சமீபத்தில் பதவியேற்றார். இவர் துணை அதிபராக பதவி ஏற்ற முதல் கருப்பின ஆசிய – அமெரிக்க பெண் ஆவார். அதுமட்டுமின்றி இவரது தாயார் இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர். அமெரிக்காவின் முக்கிய பொறுப்பில் இந்திய வம்சாவளி பெண் அங்கம் வகிப்பதால், இந்தியாவுடனான உறவு மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தி உள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜென் சக்கி, “துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்று இருப்பது அமெரிக்க வரலாற்றில் சிறப்புமிக்க சாதனையாக பார்க்கப்படுகிறது. இதன்மூலம அமெரிக்கா -இந்தியா இடையிலான உறவு மேலும் வலுவடையும். அதிபர் ஜோ பைடன் பலமுறை இந்தியாவுக்கு பயணம் சென்றுள்ளார். இந்திய நாட்டு தலைவர்களுக்கிடையே நீண்ட நாட்களாக நட்புறவை மதிப்பளிக்கிறார். இந்த உறவு அது இனியும் தொடரும்” எனக் கூறினார். அதிபர் பைடன் தனது அமைச்சரவையின் முக்கிய பதவிகளில் ஏராளமான இந்திய வம்சாவளியினரை நியமித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள பைடனின் நிர்வாக குழுக்களில் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 20க்கும் மேற்பட்ட அமெரிக்க வாழ் இந்தியர்கள் கோலோச்சி உள்ளனர்.
இதையும் படிக்கலாமே: இனி என்ன செய்ய போகிறார் ட்ரம்ப்?