“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.
குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று அமெரிக்கா.
இதனிடையே அமெரிக்கா கொரோனா தடுப்பூசி அதிதீவிரமாக ஈடுபட்டுவரும் நிலையில், அங்கு கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துவந்தது.
அதிவேகமாக பரவும் டெல்டா மரபணு மாற்ற வைரசின் தாக்கத்தாலும், தடுப்பூசி போடுவதில் ஏற்பட்ட தேக்கத்தாலும், அமெரிக்காவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை படுவேகத்தில் அதிகரிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜூலை 6 ஆம் தேதி நிலவரப்படி, ஏழு நாள் சராசரி தொற்று எண்ணிக்கை 13 ஆயிரத்து 859 ஆகும், இது இரண்டு வாரங்களுக்கு முன்பு இருந்ததை விட 21 சதவிகிதம் அதிகம் என அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புத் துறை தெரிவித்துள்ளது.
இந்த அளவுக்கு தொற்று அதிகரிக்க டெல்டா வைரஸ் 52 சதவிகிதம் அளவுக்கு காரணம் எனவும் அது தெரிவித்துள்ளது.
எந்த நாட்டையும் விட அதிக அளவில் தடுப்பூசியை வைத்திருந்தாலும், ஏப்ரல் முதல் அமெரிக்காவில் தடுப்பூசி போடுவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.