அமெரிக்கா அதிபர் தேர்தலில் இரண்டு கட்சிகளும் போட்டிபோட்டு கொண்டு பரப்புரை செய்து வருகின்றன. தேர்தல் எப்படி நடைபெறுகிறது? அதிபர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார் என தெரிந்துகொள்வோம்.
அமெரிக்கா அரசியல் சாசன விதிகளின் படி நடப்பாண்டில் நவம்பர் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. குடியரசு கட்சி சார்பாக டொனால்ட் ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும் அதிபர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். அமெரிக்காவில் மொத்தம் 50 மாகாணங்கள் உள்ளன. ஒவ்வொரு மாகாணத்திலும் இருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் எலெக்டர்களே அதிபரை தேர்வு செய்கின்றனர். இந்த எலெக்டர்களை கொண்ட அமைப்பு தான் எலெக்டோரல் காலேஜ் அதாவது தேர்தல் அவை என அழைக்கப்படுகிறது.
தேர்தல் நாளில் மக்கள் மறைமுகமாக இந்த தேர்தல் அவை உறுப்பினர்களையே தேர்ந்தெடுக்கின்றனர். ஒவ்வொரு மாகாணத்திலும் தேர்தல் அவை உறுப்பினர்களின் எண்ணிக்கை மாறுபடும். மொத்தமாக 538 உறுப்பினர்கள் தேர்தல் அவையில் உள்ளனர். எனவே 270 உறுப்பினர்களின் வாக்குகளை பெறும் வேட்பாளரே அதிபராகும் வாய்ப்பை பெறுவார். ஒரு மாகாணத்தில் அதிபர் வேட்பாளர் பெரும்பாலான மக்களின் வாக்குகளை பெற்றால், அந்த மாகாணத்தின் மொத்த தேர்தல் அவை உறுப்பினர்களின் வாக்குமே அந்த வேட்பாளருக்கே போய்விடும். பொதுத்தேர்தல் முடிந்து பின்பு தேர்தல் அவை உறுப்பினர்கள் வாக்களித்து அதிபரை தேர்வு செய்வார்கள். எனினும் பொதுத்தேர்தல் முடிந்த அடுத்த நாளே வெற்றியாளர் யார் என்பது தெரிந்துவிடும். புதிய அதிபர் ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்பார்.
இதையும் படிக்கலாமே: ஜோ பிடனுக்காக கைகோர்த்த அமெரிக்க வாழ் இந்திய, பாகிஸ்தானியர்!
அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…