அமெரிக்காவில் இதுவரை 4.1 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது

Covid-19 vaccine

அமெரிக்காவில் இதுவரை 4.1 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.

குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

Vaccine

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாகவே நாட்டின் தினசரி பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

இதனிடையே கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி முதல் அமெரிக்காவில் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பைடன், மைக் பென்ஸ் உள்ளிட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இதன்மூலம் மக்களுக்கு தடுப்பூசி மீதான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புத்துறை அனுமதி அளித்தது.

இந்நிலையில் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்கா இன்று மிக முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதுவரை மொத்தம் 4,12,10,937 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. முன்களப்பணியாளர்கள் மட்டுமின்றி அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளனர்.

இருப்பினும் மக்கள் கவனமாகவும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

நாட்டின் அனைத்து தடுப்பூசி செலுத்தும் மையங்களிலும் தொடர்ச்சியாக தடுப்பூசிகள் விநியோகிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.