அமெரிக்காவின் முதல் பெண்மணியான அதிபர் பைடனின் மனைவி ஜில் பைடன் பணிப்பெண்ணாக வேடமிட்ட சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முட்டாள் தினமாக கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி பணியாளர்களையும், பத்திரிக்கையாளர்களையும் ஜில் பைடன் பணிப்பெண் போல வேடமணிந்து ஏமாற்றியுள்ளார்.
கலிபோர்னியாவிலிருந்து வாஷிங்டனுக்கு விமானத்தில் பயணித்துவந்த ஜில் பைடன், கருநிற முடியை வைத்துக்கொண்டு முகக்கவசம் அணிந்து கொண்டு விமான பணிப்பெண் போல விமானத்தில் பயணித்தார்.
அப்போது விமானத்திலிருந்த அனைவருக்கும் இனிப்பு வழங்கி பணிப்பெண் போல உபசரித்தார். அவரை பணிப்பெண்ணாகவே அனைவரும் கருதினர். காரணம் அடையாளமே தெரியவில்லையாம்,
விமானம் தரையிறங்கியதும் செய்தியாளர் சந்திப்பு ஜாஸ்மின் என்ற பணிப்பெண் வந்தார். விமான பணிப்பெண் எதற்கு பத்திரிக்கையாளரை சந்திக்கிறார் என அனைவரும் வியப்புடன் பார்த்தனர்.
அப்போது அனைவர் முன்பும் விக்கையும், மாஸ்க்கையும் கழட்டிவிட்டு April fools என கத்தினார். ஜில் பைடனின் செயல் அங்கிருந்த நிருபர்களையும் பணியாளர்களையும் திகைப்படையவைத்தது.
ஜில் பைடன், ஜோ பைடனின் இரண்டாவது மனைவி. தனது காதல் மனைவியும் மகளும் விபத்தில் மரணமடைந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு 1978-ஆம் ஆண்டில் ஜில் பைடனை ஜோ பைடன் திருமணம் செய்து கொண்டார்.
வாழ்க்கையை மீட்டுக் கொடுத்தவர் ஜில் என்று ஜோ பைடன் பலமுறை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருக்கிறார். தாயை இழந்த இரு மகன்களையும் அன்புகாட்டி வளர்த்த விதம் குறித்தும் ஜோ பைடன் உணர்ச்சி பொங்கக் கூறியிருக்கிறார்.
ஜில் பைடனின் இயற்பெயர் ஜில் டிரேசி ஜேக்கப்ஸ். இத்தாலிய-அமெரிக்கக் குடும்பத்தில் பிறந்தவர். இத்தாலிய பாரம்பரியத்தில் இருந்து தற்போது முதல் பெண்மணியாகியிருக்கிறார்.