அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் 3 ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றார்.
துணை அதிபராக கமலாஹாரிஸ் தேர்வானார். இவர்கள் இருவரும் வரும் 20 ஆம் தேதி முறைப்படி பதவியேற்கவிருக்கின்றனர். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.
இதனிடையே பைடனின் வெற்றியை உறுதி செய்யும்பொருட்டு கடந்த 6ஆம் தேதி தேர்தல் சபை தேர்வாளர்கள் அளித்த வாக்குகள் நாடாளுமன்றத்தில் எண்ணப்பட்டு, பைடனின் வெற்றியை அங்கீகரித்து சான்றிதழ் அளிக்கு நிகழ்வு நடந்தது.
அப்போது, நாடாளுமன்றத்தின் அருகே திரண்ட ட்ரம்ப் ஆதரவாளர்கள், நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்றனர்.
இதனால், ஏற்பட்ட கலவரத்தில் ஒரு பெண், ஒரு போலீஸ் அதிகாரி உள்ளிட்ட 6பேர் உயிரிழந்தனர்.
உலகையே அதிரவைத்த இந்த நாடாளுமன்ற வன்முறைக்கு ட்விட்டரில் ட்ரம்ப் வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவிட்ட கருத்துகளே காரணம் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற வன்முறையின் போது அதிகாரிகள் அல்லது எம்பிக்கள் சிலரை பணயக் கைதிகளாக பிடிக்க முயற்சி நடந்ததாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வன்முறை தொடர்பாக டெக்சாஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையில் வழக்குரைஞர் ஒருவர் இதைத் தெரிவித்தார்.
அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் ஊடுறுவிய கும்பலில் முன்னாள் விமானப்படை வீரர் ஒருவரும் இருந்ததாகவும் அவர் கைவிலங்குகள் சிலவற்றை எடுத்து வந்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற அதிகாரிகளையோ உறுப்பினர்களையோ மிரட்டி கைவிலங்கிட்டு பணயக்கைதியாக பிடிப்பது அவர் நோக்கம் என்றும் வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதற்கிடையில் நாடாளுமன்றத்தில் வன்முறை நிகழ்த்திய கும்பலில் இருந்த சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக அமெரிக்க காவல் துறை தெரிவித்துள்ளது.
மேலும் இது போன்ற அசம்பாவிதங்கள் ஏதும் நிகழ்வதை தடுக்கவும் முயற்சிகள் மேற்கொண்டிருப்பதாக காவல் துறையினர் தெரிவித்தனர்
இதனிடையே அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து அந்நாட்டு சுகாதாரத்துறை செயலாளர் அலெக்ஸ் அசார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதையும் படிக்கலாமே: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் கமலா ஹாரிஸ்!