நான் அமெரிக்க அதிபர் என்னுடன் அப்படி எல்லாம் பேச வேண்டாம் என டொனால்ட் ட்ரம்ப் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நவம்பர் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பாக டொனால்டு ட்ரம்ப்பும், ஜனநாயக் கட்சி சார்பாக ஜோ பைடனும் போட்டியிட்டனர்.
கருத்துக்கணிப்புகளின் முடிவுகளைப் போலவே ஜோ பைடன் முன்னிலை பெற்று வெற்றியை ஈட்டினார்.
ஒருவார இழுபறியாக இருந்தாலும் அதிபருக்கான மெஜாரிட்டியான 270 வாக்குகளை விட அதிகளவில் ஜோ பைடன் பெற்றார்.
ட்ரம்ப் செய்த சில மேல்முறையீடுகள் நீதிமன்றத்தால் தள்ளுப்படி செய்யப்பட்டன.
306 வாக்குகளைப் பெற்று அதிபராக எந்தத் தடையும் இல்லாமல் பயணிக்கிறார் ஜோ பைடன். ஆனால், ட்ரம்ப் இன்னும் பிடிவாதமாக இருக்கிறார்.
இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் அதிபர் ட்ரம்ப் பேசிக்கொண்டிருந்தார். அப்போது ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் நிருபர் ஜெஃப் மேசன், அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனுக்கு எதிரான தனது தோல்வியை ஒப்புக் கொள்ள விரும்புகிறீர்களா? என கேள்வி எழுப்பினார். இதனால் ஆத்திரமடைந்த ட்ரம்ப், நான் அமெரிக்காவின் அதிபர், அதிபருடன் ஒருபோதும் அப்படி பேச வேண்டாம், இனி இப்படியெல்லாம் என்னிடம் பேசாதீர்கள் என கோபமாக கூறினார். தொடர்ந்து பேசிய அதிபர் ட்ரம்ப், “நான் தேர்தலில் தோல்வியடையவில்லை. இது மோசமான தேர்தல். தேர்தலில் நடைபெற்ற மோசடி காரணமாகவே பைடன் வெற்றிப் பெற்றுள்ளார்” எனக் கூறினார்.
அமெரிக்க தேர்தல் தொடர்பாக டிரம்பின் குற்றச்சாட்டை தேர்தல் நடத்தும் அமைப்பு நிராகரித்திருந்தது குறிப்பிடதக்கது.
இதையும் படிக்கலாமே: வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேற தயார்- அதிபர் ட்ரம்ப்
அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…