“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.
குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாகவே நாட்டின் தினசரி பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்வதற்கு அமெரிக்காவின் 3 முன்னாள் அதிபர்கள் முன்வந்துள்ளனர்.
உலகம் முழுவதும் பல நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசியை கண்டறிவதில் தீவிரம் காட்டி வருகின்றன. குறிப்பாக அமெரிக்காவின் ஃபைசர் மற்றும் மாடனா நிறுவனங்கள் 3-ம் கட்ட பரிசோதனையை முடித்துள்ளன.
இந்த நிலையில் அமெரிக்க மக்களில் 10-ல் ஆறு பேர் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு தயக்கம் காட்டி வருவதாக ஓர் ஆய்வில் தெரியவந்தது.
இதையடுத்து மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர்கள் பராக் ஒபாமா, ஜார்ஜ் டபிள்யூ புஷ், பில் கிளிண்டன் ஆகியோர் கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொள்ள முன்வந்தனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த அதிபர் ஒபாமா, “தேசிய தொற்றுநோய்கள் நிபுணர் அந்தோனி பாசியுடன் நான் பணியாற்றியுள்ளேன். ஆகவே அவரை முழுமையாக நம்புகிறேன்.
இந்த தடுப்பூசி பாதுகாப்பானது என்று அந்தோனி பாசி உறுதியளித்தால் அதனை நான் போட்டுக்கொள்ள தயார். நான் அறிவியலை நம்புகிறேன். மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த தொலைக்காட்சி முன்பு தடுப்பூசி செலுத்திக்கொள்வேன்” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிக்கலாமே: 2024 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன் – ட்ரம்ப்
அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…