வாஷிங்டனில் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்த அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் ஆதரவாளர்களை அப்புறப்படுத்த காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் உயிரிழந்தார்.
நாடாளுமன்றத்திற்குள் அதிரடியாக புகுந்த ஆயிரக்கணக்கான ட்ரம்ப்பின் ஆதரவாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் மோதல் மூண்டது. அப்போது அப்பகுதியில் பைப் வெடிகுண்டு வீசப்பட்டதாக கூறப்படுகிறது.
அச்சமயம் பல முறை துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கூறியுள்ளனர்.
இதையடுத்து, முற்றுகையிட்டவர்களை வெளியேற்ற காவல்துறையினர் துப்பாக்கிச்சுடு நடத்தினர். இ்தில் ஒரு பெண் மீது குண்டு பாய்ந்தது.
படுகாயமடைந்த அந்தப்பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதன்பின் நடந்த வன்முறையில் 3 பேர் உயிரிழந்தனர். வன்முறையில் ஈடுபட்டதாக 52 பேர் கைது செய்யப்பட்டனர். சில நபர்களிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அதன்பின்னர் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு நாடாளுமன்றத்தின் நுழைவுவாயில்கள் அனைத்தும் மூடப்பட்டு, பூட்டப்பட்டது. அப்போது ஏற்பட்ட மோதலில் காவல்துறையினர் சிலரும் காயமடைந்தனர்.
நிலைமை மோசமானதால், அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் வழிகாட்டுதலின் பேரில், தேசிய காவலர் மற்றும் பாதுகாப்புப் படையினர் வாஷிங்டனுக்கு விரைந்துள்ளதாக வெள்ளை மாளிகையில் பத்திரிகை செயலாளர் கெய்லி மெக்னன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தை டொனால்டு ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டதால் ஏற்பட்ட பதற்றத்தை அடுத்து தலைநகர் வாஷிங்டனில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே: பைடனின் வெற்றியை ஏற்க மறுத்து ட்ரம்ப் ஆதரவாளர்கள் போராட்டம்!
அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…