கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தனது சொந்த மாநிலமான புளோரிடாவில் பரப்புரை மேற்கொண்டார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த ஒன்றாம் தேதி உறுதியானது. முதலில் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்ட ட்ரம்ப், காய்ச்சல் அதிகமானதால், மேரிலேண்டில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
4 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், தீவிர சிகிச்சைக்கு பின்னர் வீடு வெள்ளை மாளிகைக்கு திரும்பினார்.
அங்கும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. முன்னதாக மருத்துவமனையில் இருந்த போது ட்ரம்புக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், ஆக்ஸிஜன் தரப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.
இந்நிலையில் தற்போது கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தத ட்ரம்ப், தனது தேர்தல் பரப்புரையை முழுவீச்சுடன் தொடங்கியுள்ளார். புளோரிடா மாநிலம் சாண்போர்ட்டில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய அவர், தனது சொந்த மாநிலத்தில் மீண்டும் பரப்புரை மேற்கொள்வது மகிழ்ச்சியளிப்பதாகவும், தங்களின் பிரார்த்தனையாலேயே குணமடைந்ததாகவும் தெரிவித்தார். தற்போது சக்திவாய்ந்தவனாக உணருகிறேன் என தெரிவித்த அதிபர் ட்ரம்ப், அனைவரையும் முத்தமிட விரும்புவதாகவும் தெரிவித்தார். நான் ஒன்றும் வயதானவர் இல்லை எனக்கூறிய ட்ரம்ப், நான் இளமையானவன் என்றும் நான் நல்ல உடல் வடிவத்துடன் இருக்கிறேன் என்றும் கூறினார். பரப்புரைக்கு இடையே அதிபர் ட்ரம்ப் நடனமாடி அவரது ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தினார். பேரணியில் அதிபர் ட்ரம்ப் உட்பட ஒரு சிலர் முகக்கவசம் அணியாததால் நோய் பரவும் அச்சம் ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிக்கலாமே: அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு கொரோனா நெகட்டிவ்!
அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…